புதிரும் பதிலும் -2


புதிர் போட்ட பாதிரிக்கு பாடம் புகட்டிய பிஸ்தாமி.

மகான் ஹளரத் அபூயஸீத் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் மிகப்பெரிய மெஞ்ஞானி.அல்லாஹ்வின் அருள் பெற்ற இந்த இறைநேசரிடம் ஒரு நாள் ஒரு பாதிரியார் தனது சீடர்கள் புடைசூழ பந்தாவாக வந்தார்.பிஸ்தாமி அவர்களை பயந்து பின் வாங்கச் செய்யும் பல புதிர் கேள்விகளை பாதிரியார் மிக கம்பீரமாக கேட்டார். அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதறாமல் சட்டென்று பதில் கூறி பாதிரியாரை வியக்க வைத்தார்கள் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள்.

இப்போது அந்த பாதிரியாரின் புதிர்களையும் பிஸ்தாமியின் புத்திசாலித்தனமான பதில்களையும் பார்ப்போம்!

1, ஒன்று தான் உள்ளது. இரண்டு இல்லை. அது என்ன?
அல்லாஹ் ஒருவன்.
قل هو الله احد  நபியே கூறுங்கள் [அந்த] அல்லாஹ் ஒருவன் தான். [அல்குர்ஆன் :112 ;1]

2, இரண்டு தான் இருக்கிறது. மூன்று இல்லை. அது என்ன?
இரவும் பகலும்.
وجعلنا الليل والنهار ايتين நாம் இரவையும் பகலையும் இரு அத்தாட்சிகளாக ஆக்கினோம். [அல்குர்ஆன் :17 ;12]

3, மூன்று தான். நான்கு இல்லை. அது என்ன?
கிள்ரு நபி [அலை] அவர்கள், மூஸா நபி [அலை] அவர்களுக்கு நடத்திய பாடத்தின் தலைப்புகள் மூன்று தான்.
1] கப்பல் சேதம்.
2] சிறுவன் கொலை.
3] சுவர்.

4, நான்கு தான். ஐந்து இல்லை. அது என்ன?
வேதங்கள் நான்கு. தவ்ராத்,ஸபூர்,இன்ஜீல்,குர்ஆன்.

5, ஐந்து தான். ஆறில்லை. அது என்ன?
ஒரு நாளைக்கு கடமையான தொழுகைகள் ஐந்து தான்.

6, ஆறு தான். ஏழில்லை. அது என்ன?
வானத்தையும்,பூமியையும் அல்லாஹ் படைத்த நாட்கள் ஆறு.
وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِنْ لُغُوبٍ நிச்சயமாக நாம் தான் வானங்களையும்,பூமியையும் அதற்கு மத்தியிலுள்ளவை களையும் ஆறே நாட்களில் படைத்தோம்.அதனால் நமக்கு யாதொரு களைப்பும் [சோர்வும்] ஏற்பட்டு விடவில்லை. [அல்குர்ஆன் :50 ;38]

பாதிரி      ; இந்த வசனத்தின முடிவில் “அதனால் நமக்கு யாதொரு களைப்பும் ஏற்பட வில்லை” என்று ஏன் சொல்லி முடித்தான்?

பிஸ்தாமி   ; யூதர்களுக்கு மறுப்பு கூறுவதற்காக அவ்வாறு சொல்லி முடித்தான்.ஏனெனில் அவர்கள் சொன்னார்கள் ; அல்லாஹ் வானங்களையும்,பூமியையும் ஆறு நாட்களில் [ஞாயிறு முதல் வெள்ளி வரை] படைத்த போது  அவனுக்கு களைப்பு ஏற்பட்டது.எனவே ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டான்.அது சனிக்கிழமை,ஏழாம் நாள். இதை மறுப்பதற்காக மேற்கண்டவாறு “நமக்கு எந்த களைப்பும் ஏற்பட வில்லை” எனக்கூறினான்.

7, ஏழு தான். எட்டு இல்லை. அது என்ன?
வாரத்தின் நாட்கள் ஏழு.

8, எட்டு தான். ஒன்பது இல்லை. அது என்ன?
அர்ஷை சுமக்கும் மலக்குகள் எட்டு பேர்.
وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ அந்நாளில் உங்கள் இறைவனின் அர்ஷை எட்டு மலக்குகள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள். [அல்குர்ஆன் :69 ;17]

9, ஒன்பது முஃஜிஸாக்கள். அது என்ன?
அது மூஸா நபி [அலை] அவர்களின் முஃஜிஸாக்கள்.
1]கை. 2]கைத்தடி. 3]தம்ஸ் – பொருள் நாசமாகுதல். 4] [மழையுடன் கூடிய] புயல் காற்று. 5]வெட்டுக்கிளி. 6]பேன். 7]தவளை. 8]இரத்தம். 9]பஞ்சம். [காண்க :7 ;133, 10 ;88, 17 ;101, 27 ;10,12]

10, கூடுதலை ஏற்றுக் கொள்ளும் பத்து. அது என்ன?
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا  எவரேனும் ஒரு நன்மையை செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு [நன்மை கூடுதலாக] உண்டு. [அல்குர்ஆன் :6 ;160]

11, பதினோறு பேர். அவர்கள் யார்?
யூசுஃப் நபி [அலை] அவர்களின் சகோதரர்கள். [காண்க :12 ;04]

12, பன்னிரண்டிலிருந்து உண்டான முஃஜிஸா எது?
وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا மூஸா தன் இனத்தாரு [டன் தீஹ் என்ற மைதானத்திற்கு சென்ற சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களு]க்கு தண்ணீர் தேடிய போது [நாம் அவரை நோக்கி] நீங்கள் உங்களது தடியால் இக்கல்லை அடியுங்கள் என்று கூறினோம்.[அவர் அவ்வாறு அடித்ததும்] உடனே அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் உதித் தோடியன. [அல்குர்ஆன் :2 ;60]

13, பதிமூன்று பேர். அவர்கள் யார்?
யூசுஃப் நபியுடைய சகோதரர்கள் மற்றும் அவர்களின் தாயும் தந்தையும். [11 + 2] 13 பேர்களாகும்.

14, மூச்சு விடும்.ஆனால் அதற்கு உயிர் இல்லை. அது என்ன?
والصبح اذا تنفس மூச்சு விடும் [உதயமாகும்] காலையின் மீதும் சத்தியமாக. [அல்குர்ஆன் :81 ;18]

15, கப்று கொண்டு நடந்தவர் யார்?
யூனுஸ் நபி [அலை] அவர்கள்.
فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ  لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ நிச்சயமாக அவர் [யூனுஸ் நபி] நம்மைத் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால் [மறுமையில்] எழுப்பப்படும் நாள் [வரும்] வரையில் அவர் அதன் வயிற்றில் தங்கியிருப்பார். [அல்குர்ஆன் :27; 143,144]

16, உண்மை சொன்னார்கள். ஆனால் நரகம் சென்றார்கள். அவர்கள் யார்?
யூதர்களும்,கிறிஸ்தவர்களும்.
وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَى عَلَى شَيْءٍ وَقَالَتِ النَّصَارَى لَيْسَتِ الْيَهُودُ عَلَى شَيْءٍ وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ “கிறிஸ்தவர்கள் எ[ந்த மார்க்கத்]திலுமில்லை” என யூதர்கள் கூறுகின்றனர். [அவ்வாறே] “யூதர்கள் எ[ந்த மார்க்கத்]திலுமில்லை” எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால் இவ்விருவருமே [தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் பழைய ஏற்பாடாகிய தவ்ராத் என்னும் ஒரே] வேதத்தையே ஓதுகின்றனர். [அல்குர்ஆன் :2 ;113]

17, பொய் சொன்னார்கள்.ஆனால் சொர்க்கம் சென்றார்கள். அவர்கள் யார்?
யூசுஃப் நபி [அலை] அவர்களின் சகோதரர்கள்.[“யூசுஃப் நபியை ஓநாய் கடித்து தின்று விட்டது” என்று பொய் சொல்லி, பிறகு தௌபா செய்து [பாவ மன்னிப்பு] திருந்தி இறை நேசரானார்கள்]

18, அல்லாஹ் படைத்த அந்த படைப்புகளுக்கு தந்தையும் இல்லை,தாயும் இல்லை. அவர்கள் யார்?
மலக்குகள் – வானவர்கள்.

19, பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட ஒரு மரம். அதில் ஒவ்வொரு கிளையிலும் முப்பது இலைகள். ஒவ்வொரு இலையிலும் ஐந்து பழங்கள்.அதில் மூன்று நிழலிலும் இரண்டு சூரிய வெயிலிலும் இருக்கிறது. இது என்ன?
இந்த மரம் என்பது வருடம். இதில் பன்னிரண்டு மாதங்கள். முப்பது இலைகள் என்பது முப்பது நாட்கள்.ஐந்து கனிகள் என்பது ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை.இதில் மக்ரிப்,இஷா, ஃபஜ்ரு நிழலிலும் லுஹர்,அஸர் சூரிய வெயிலிலும் உள்ளது.

இவ்வாறு வெற்றி கரமாக கேள்வி பதில் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், மகான் அபூயஸீத் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் அந்த பாதிரியாரிடம் கூறினார்கள் ; நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறினேன். நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்லுங்கள்.
அப்படி என்ன கேட்டிருப்பார்கள்?.... காத்திருங்கள்.

என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு