ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- இரண்டாம் பாகம்.



யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்:
அங்கு வந்து அங்கு அடங்கி இருக்கும் இறை நேசர்களின் 
பொருட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (வலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதினா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.




மகிமை:

ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள்.


மக்பராக்கள்:

ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அபுத்தாகிர் (வலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும்,







ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா, துணைவியர் சைய்யிது அலிபாத்திமா என்னும் ஜைனப், தங்கை சையிது ராபியா, மைத்துனர் சையிதுஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர்களின் சமாதிகளும் காணமுடியும்.




நோய் தீர்க்கும் தலம்:

ஏர்வாடி தர்கா வளாகத்தில் ஜாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கிசெல்கின்றனர். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமாரசுவாமி ரகுநாதசேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்து வந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்துவிஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்துவிஜயன் நோய் முற்றிலுமாக நீங்கியுள்ளது. ஏர்வாடி தர்காவின் மகிமையை தனது மருமகனான மன்னர்சேதுபதியிடம் கூறியுள்ளார். மன்னரும் தனது மனைவிக்கு ஆண்வாரிசில்லை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதிமுன் முறையிட்டுள்ளனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண்வாரிசு கிட்டியது. இதற்கு பகரமாக ராமநாதபுரம் மன்னர் ஏர்வாடியை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு இதைவிட சான்று தேவையில்லை.


சந்தனக்கூடு திருவிழா:

சேதுபதி மன்னர் இணைந்து ஆரம்பித்து வைத்ததுதான் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் துல்கஃதா பிறை 1 ல் புனித மௌலீது ஷரீப் ஆரம்பித்து அடிமரம் ஏற்றுதல், கொடியேற்றம், சந்தனக் கூடு திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழா அன்று புனித மௌலீது நிறைவடைந்து சிறப்பு துஆ ஓதப்படும். சந்தனக்கூடு ஊர்வலத்துடன் பாதுஷா நாயகம் மக்பராவிற்கு (சமாதிக்கு) சந்தனம் பூசும் புனித நிகழ்ச்சிநடைபெறும், துல்கஃதா பிறை 30 அன்று புனிதகுர்ஆன் ஷரீப் ஓதி தமாம் (நிறைவு) செய்து கொடி இறக்கப்படும். சந்தனக்கூடு செய்வதில் இந்து மதத்தினருக்கு பங்களிப்பு உள்ளது. 

யார்வாடி நின்றாலும் ஏர்வாடி வந்தால் நலம் பெறலாம் என்று ஏர்வாடி தர்கா அருகில் உள்ள கடல் அலைகள் முழங்கிக் கொண்டே இருக்கின்றன.வஸ்ஸலாம்,

நன்றி ;- முஹம்மது இக்ராமுல்லாஹ் கனீமீ அவர்கள்.

வெளியீடு-

மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு