ஆரோக்கியத்தின் அவசியங்களும் ஆலோசனைகளும்


وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِين
நான் நோயுற்றால் அவனே [அல்லாஹ்வே] என்னை குணப்படுத்து வான். [அல்குர்ஆன் :26 ; 80]

இது இறைத்தூதர் கலீலுல்லாஹ் – இப்ராஹீம் [அலை] அவர்களின் ஏகத்துவ முகவரியை எடுத்துச் சொல்லும் ஓர் திருமறை வசனம். நோய் என்பது அடியானை அடையாளப்படுத்தும்,அல்லாஹ்வை விட்டும் அவனை வேறுபடுத்தும் ஓர் வேதனைச் சாட்சியம்.

“நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்” என்பது தமிழ் முதுமொழி.

“ஆரோக்கியமின்றி இந்த உலகை அனுபவிக்க முடியாது” என்பார் பென்ஜான்சன்.

“ஆரோக்கியத்தைக் கட்டிக்காப்பது ஒரு கடமை. உடல் நல அறிவியல் என ஒன்று இருக்கிறது என்பதை அறிந்தவர் சிலரே” எனச் சொல்வார் ஸ்பென்சர்.

இந்த உடல் நல மருத்துவ அறிவியலை விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞானத் தூதர் மாநபி [ஸல்] அவர்கள் அறிந்து,அறிவித்த திப்பு நபவி – நபி வழி மருத்துவம் என்றே ஒரு அத்தியாயம் நிறைவாகவும், விரிவாகவும் நபிமொழித் தொகுப்புகளில் தனியாகக் காணப்படுகிறது. இதில் ஆரோக்கியத்தின் அவசியங்களும், அதற்கான ஆலோசனை களும் நிறையவே கூறப்பட்டுள்ளது. மருத்துவ வகைகளும்,மருத்துவ வழிமுறைகளும் கூட சொல்லப் பட்டுள்ளது.

உடல் நலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பெருமானார் [ஸல்] அவர்கள் வலியுறுத்தியது போன்று அந்த அளவுக்கு வேறு யாரும் அதன் அவசியத்தை எடுத்துக் கூறியதில்லை.


أَنَّ مُعَاذَ بْنَ رِفَاعَةَ أَخْبَرَهُ عَنْ أَبِيهِ قَالَ
قَامَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ عَلَى الْمِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْأَوَّلِ عَلَى الْمِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ اسْأَلُوا اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فَإِنَّ أَحَدًا لَمْ يُعْطَ بَعْدَ الْيَقِينِ خَيْرًا مِنْ الْعَافِيَةِ

இறைத்தூதர் [ஸல்] அவர்கள் ஒரு முறை மிம்பரில் நின்றார்கள். [உணர்வுப்பூர்வமாக பிரசங்கம் செய்தார்கள்] பிறகு அழுது கொண்டே கூறினார்கள் ; அல்லாஹ்விடம் சுகமும்,மன்னிப்பும் கிடைக்கப் பிரார்த்தனை செய்யுங்கள்.ஏனெனில் நிச்சயமாக ஈமானுக்குப் பிறகு சுகத்தை விட சிறந்த [பாக்கியத்] தை எவரும் வழங்கப்பட்டதில்லை. [திர்மிதி ; 3557]


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ سَلْ رَبَّكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّانِي فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ قَالَ فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَأُعْطِيتَهَا فِي الْآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ

நபிகள் நாயகம் [ஸல்] அவர்களிடம் [அல்லாஹ்விடம் கேட்பதற்கு] எந்தப் பிரார்த்தனை சிறந்தது? எனக்கேட்டு ஒருவர் வந்தார். அவருக்கு அண்ணல் பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ; இம்மையிலும்,மறுமையிலும் உனக்கு சுகம் கிடைக்க உனது இறைவனிடம் பிரார்த்தனை செய் என்றார்கள்.அவர் இரண்டாவது நாளும் மூன்றாவது நாளும் வந்து இதே கேள்வியைக் கேட்ட போதும் இதே பதிலைத்தான் திரும்பத் திரும்ப அவருக்கு அண்ணலார் [ஸல்] அவர்கள் கூறி உனக்கு இம்மையிலும், மறுமையிலும் சுகம் வழங்கப்பட்டு விட்டால் நீ வெற்றி பெற்று விட்டாய் என்று சொன்னார்கள். [திர்மிதி ; 3512]


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ قَالُوا فَمَاذَا نَقُولُ يَا رَسُولَ اللَّهِ قَالَ سَلُوا اللَّهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது [ஏற்றுக்கொள்ளப்படும்] என்று சொன்ன சத்திய நபி [ஸல்] அவர்களிடம் அப்போது என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு ; அல்லாஹ் விடம் இம்மை,மறுமை சுகத்தைக் கேளுங்கள் என்று ஏந்தல் நபி [ஸல்] அவர்கள் பதிலளித்தார்கள். [திர்மிதி]


وكان ابن عباس إذا شرب ماء زمزم قال : « اللهم أسألك علما نافعا ، ورزقا واسعا ، وشفاء من كل داء
ஸம்ஸம் தண்ணீர் என்ன பிரார்த்தனை செய்து அதைக் குடித்தாலும் அது நிறைவேறும் என்பது நபிமொழி. ஸம்ஸம் தண்ணீர் குடிக்கும் போது மார்க்கம் கற்றுக் கொடுத்த பிரார்த்தனை என்ன தெரியுமா? பயனுள்ள கல்வி,வளமான வாழ்வாதாரம்,எல்லா பினியிலிருந்தும் நிவாரணத்தைக் கொடு எனக் கேட்க வேண்டும் என்று.


وَسَمِعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا وَهُوَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصَّبْرَ فَقَالَ سَأَلْتَ اللَّهَ الْبَلَاءَ فَسَلْهُ الْعَافِيَةَ

யா அல்லாஹ்! உன்னிடம் பொறுமையைக் கேட்கிறேன் என்று பிரார்த்தனை செய்ததைக் கேட்டுக் கொண்டிருந்த கருணை நபி [ஸல்] அவர்கள் அவரிடம், [இந்தப் பிரார்த்தனையின் மூலம்] அல்லாஹ்விடம் சோதனையைக் கேட்டு விட்டாய். [அப்போது தானே பொறுமை தேவைப்படும்.அதனால் அப்படி கேட்காதே] நீ அவனிடம் சுகத்தைப் பிரார்த்தனை செய்! என்றுரைத்தார்கள். [திர்மிதி ; 3527]

தினமும் காலை,மாலை நபி [ஸல்] அவர்கள் செய்த பிரார்த்தனை களில் இப்படி ஒரு துஆவும் நபிமொழிகளில் வந்துள்ளது.


قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ أَنَّهُ قَالَ لِأَبِيهِ
يَا أَبَتِ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ وَثَلَاثًا حِينَ تُمْسِي فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ

யா அல்லாஹ்! எனக்கு உடலில் ஆரோக்கியத்தை அளிப்பாயாக! எனது செவியில் ஆரோக்கியத்தை வழங்குவாயாக!எனது பார்வையில் சுகத்தைத் தருவாயாக!இந்த துஆவை மூன்று முறை ஓதுவார்கள். [அபூதாவூது 5090]


عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا سُئِلَ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِ مِنْ الْعَافِيَةِ

அல்லாஹ்விடம் கேட்கப்படும் பிராத்தனைகளில் நற்சுகத்தைத் தவிர மிகவும் அவனுக்குப் பிரியமான பிரார்த்தனை வேறு எதுவும் இல்லை. [திர்மிதி 3548]

எனவே தான் நபி பெருமான் [ஸல்] அவர்களிடம் ஹள்ரத் அப்பாஸ் [ரலி] அவர்கள் தனக்கு ஒரு துஆவைக் கற்றுத் தருமாறு கேட்டுக் கொண்ட போது, சச்சா! நீங்கள் இம்மை,மறுமை சுகத்தை அல்லாஹ்விடம் அதிகம் கேளுங்கள் என்றுரைத்தார்கள்.


عَنْ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ
قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ سَلْ اللَّهَ الْعَافِيَةَ فَمَكَثْتُ أَيَّامًا ثُمَّ جِئْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ فَقَالَ لِي يَا عَبَّاسُ يَا عَمَّ رَسُولِ اللَّهِ سَلْ اللَّهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

கேட்டதில் சுவைத்த செய்தி ; மூஸா நபி [அலை] அவர்கள் அல்லாஹ்விடம், யாஅல்லாஹ்! ஒரு பேச்சுக்காக நீ மூஸாவாக வும்,நான் அல்லாஹ்வாகவும் இருந்தால் நீ என்னிடம் என்ன பிரார்த்திப்பாய்? எனக் கேட்ட போது, நான்  ஆரோக்கியத்தைக் கேட்பேன் என அல்லாஹ் கூறினானாம்.

இந்தளவு வலியுறுத்தப்பட்டுள்ள ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான ஆலோசனைகளை இனி நாம் பார்ப்போம்.

வாழ்வியலின் எல்லா விதிகளும் குர்ஆனில் இருக்கிறது என்றால் ஆரோக்கியத்திற்கு ஆதாரமாகத் திகழும் மருத்துவ மூல விதி எதுவும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா....  என்று கலீபா ஹாரூன் ரஷீது பாதுஷாவிடம் ஒருமத அறிஞர் கேட்டார். அப்போது அந்த அவையில் வீற்றிருந்த அறிஞர் அலி இப்னு ஹுஸைன் அல்வாகிதீ அவர்கள் எழுந்து உடல் நலத்திற்கான {Golden Rule} தங்க விதியொன்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது  என்றார். "அது என்ன....?"

“உண்ணுங்கள் பருகுங்கள் அளவு கடந்து விடாதீர்கள்.” {அத்தியாயம்.7வசனம்.31}   3

இந்த வசனத்தைக் கேட்டதும் அசந்து போன அந்த அறிஞர் நானும் ஒரு மருத்துவர்தான் இது ஒரு அற்புதமான விதி என்பதை ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறே உங்கள் நபிமொழியில் ஆன்மீக போதனைகள் நிறைந்திருக்கின்ற மாதிரி உடல்நலம் தொடர்பான ஏதாவது மூலவிதிகள் கூறப்பட்டிருகிறதா...? என மீண்டும் கேள்வி எழுப்பினார்.   அதற்கு ஆம்..!  என பதிலளித்த அந்த அரசரவை அறிஞர் அலி இப்னு ஹுஸைன் அவர்கள் ; ஒரு நபிமொழியை அவருக்கு படித்துக்காண்பித்தார்.  “இரைப்பைதான்  எல்லா வியாதிகளுக்கும் அடிப்படை. நீங்கள் உங்களின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுங்கள். பத்தியம் சிகிச்சையை விட மேலானது.” 4 இதைக்கேட்டு அதிசயித்துப்போன அந்த மருத்துவ அறிஞர் உங்களுடைய வேதமும் உங்களுடைய நபியும் மருத்துவமேதை  ஜாலினூஸுக்கு எதையும் விட்டுவைக்கவில்லை எனக் கூறி வியந்தார்.

அறிஞர் அப்கராத் கூறுவார் ; பாதிப்பைக் குறைப்பது பயன்பாட்டை பெருக்குவதை விட மேலானது.களைப்புற்று சோர்வடைவதைத் தவிர்த்தும்,உண்டு,குடித்து வயிறு நிரம்புவதைத் தவிர்த்தும் நிரந்தர ஆரோக்கியத்தைத் தேடிக்கொள்ளுங்கள்.

ஒரு மருத்துவ மேதை கூறுவார் ; எவர் உடல் நலத்தை நாடுவாரோ அவர் தரமான உணவை சுத்தமாக சாப்பிடவும்,தண்ணீர் குடிப்பதைக் குறைத்து தாகத்திற்குக் குடிக்கவும்,உணவு உண்ட பின் நடக்க வேண்டும்,தன்னை உடல் உபாதைக்கு உட்படுத்தும் வரை உறங்க வேண்டாம்.வயிறு நிரம்பிய பின் கழிப்பறை செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

                                      இன்ஷா அல்லாஹ் தொடரும்...............


என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு